<$BlogRSDUrl$>

Tuesday, November 08, 2005

சில முக்கிய முடிவுகள்... 

முடிவு - 1

இன்றிலிருந்து "தமிழ் டுபுக்கு" பக்கத்திற்கு பூட்டு போட்டுவிடலாம் என்றிருக்கிறேன். ஒரே பதிவை இரண்டு தியேட்டரில் ஓட்டுவதை விட இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு தேவலாம். இதில் பின்னூட்டம் இடுபவர்கள் வேறு அங்கு இட்டுவிட்டு இங்கு வந்து காணவில்லை என்று என்னைத் திட்டுகிறார்கள். தமிழ் டுபுக்கில் அப்பிடி ஒன்னும் பின்னூட்டங்கள் பிச்சுக் கொண்டு போகவில்லை. இப்போவோ அப்போவோ ஒன்னு ரெண்டு பின்னூட்டங்கள் தான் வருகின்றன. ஆகவே தமிழ் டுபுக்கு பக்கத்தை புக் மார்க் செய்திருப்பவர்களை Dubukkuக்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன். தமிழ்மணத்தில் விபரங்களை கூடிய சீக்கிரம் அப்டேட் செய்கிறேன்.


முடிவு - 2

நானும் மிகவும் பொறுமையாக இருந்து பார்த்துவிட்டேன். பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? "உன்னால் முடியும் தம்பி" என்று நான் சொல்லிக்கொள்வது நிறைய பேருக்குப் பொறுக்கவில்லை (முக்கியமாக பெண்களுக்கு) . ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். ஒன்று என்னை "உன்னால் முடியும் தம்பி" என்று ஒத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் நான் என் பெயர் அடைமொழியை "சஞ்சய் ராமசாமி" என்று மாற்றிக் கொள்வதாய் இருக்கிறேன். சீக்கிரம் யோசித்து ஒரு நல்ல முடிவைச் சொல்லுங்கள். இந்த இரண்டு பெயரில் எதுவானாலும் எனக்குச் சம்மதம். வேறு பெயர்களையெல்லாம் சொல்லதீர்கள் சொல்லிப்புட்டேன் ஆமா.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

Monday, November 07, 2005

தருவியா தரமாட்டியா 

தருவியா தரமாட்டியா - தரலேன்னா
உன் பேச்சுக் கா
பம்பரம் நான் விடப்போறேன் - உன்
பாவாடை நாடாவைத் தருவியா

ஆழ்ந்த சிந்தனை, அற்புதமான கருத்துக்கள், ஐய்யப் பாட்டை அகற்றும் அற்புதமான பாடல்...ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சா இப்பிடி தான் பாட்டு வரும். அடிச்சிகறதுக்கு ஆயிரம் கை போதாது. அதுவும் சரத்குமாரும் நமீதாவும் போடும் ஆட்டம் சகிக்கலை. நமீதா நாளுக்கு நாள் சைடு வாக்கில் வளர்ந்து கொண்டிருக்கிறார். இப்போவே ஹீரோக்களெல்லாம் நமீதாவை தூக்கிக் கொண்டு பாட்டுப் பாட எக்ஸ்டிரா பேட்டா கேட்கிறார்களென்று கேள்விப் பட்டேன்....என்னவோ பார்த்துக்கோம்மா அப்புறம் இந்த அண்ணா சொல்லலையேன்னு சொல்லாதே!


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

Wednesday, November 02, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...10 

For previous Parts -- > Part 1      Part 2    Part 3    Part 4    Part 5    Part 6    Part 7    Part 8   Part 9

லிஸ்டில் இருந்த இரண்டு பராசக்திகளை ஏற்கனவே தெரியும். தெரியுமென்றால்..எனக்கு அஸினைத் தெரியும்ங்கற மாதிரி. ரெண்டு மூனு யூத் பெஸ்டிவல்களில் பார்த்திருக்கிறேன் பேசிப் பழக்கம் கிடையாது. காலேஜில் எங்க க்ளாசில் விஷயம் பரவியிட்டிருந்தது. விழா இரண்டு நாட்கள் தொடர்ந்து என்பதால் பையன்கள் வருவதாக சொல்லியிருந்தார்கள்.

"டேய் நீபாட்டுக்கு ஒரு ஓரமா உட்கார்ந்து வாசி..வேணாம்ங்கல ஆனா நாங்க வந்திருக்கற ஜிகிடிகள கவனிக்கணும் அதனால நீ வாசிக்கறத உட்கார்ந்து பார்க்கணும்னு எதிர்பார்க்காத எங்கிருந்தாலும் எங்க கைத்தட்டு உனக்குத் தான்" - அவர்களைச் சொல்லி குற்றமில்லை அவர்கள் வயசு அப்பிடி.

விழா ஆரம்பிப்பதற்கு முந்தின நாள் மாலையே வரச் சொல்லியிருந்தார்கள். என்ன சட்டை போட்டுக் கொள்வது, முடியை எப்பிடி சிலுப்பி வாரிக் கொள்வது, விபூதி இட்டுக்கொண்டு போனால் பழம் என்று நினைத்துவிடுவார்களோ, எப்பிடி அறிமுகப் படுத்திக் கொள்ளலாம் என்று எல்லாமே குழப்பமாக இருந்தது. அதுவும் பெண்கள் மெஜாரிட்டி உள்ள டீமில் வேறு இருக்கிறோம்...அதனாலேயே பயங்கர டென்ஷன். சொந்த மிருதங்கம் வார் இழுத்துக் கட்டவேண்டியிருந்ததால் வேறு ஒரு முக்கியமான இடத்தில்(எந்த இடமென்று வரும் பதிவுகளில் தெரியும்) கடன் வாங்கிக் கொண்டு ஒரு மார்க்கமாகப் போய்ச் சேர்ந்தேன். சென்னை தவிர மொத்த தமிழ்நாட்டுப் பல்கலைகழகங்களிலிருந்தும் குழுமியிருந்தார்கள். நான் கடைசி ஆளாகப் போய்சேர்வதற்குள் திருநெல்வேலிப் பசங்கள் பராசக்திகளிடம் அன்யோன்யமாகியிருந்தார்கள்.

வரி வாங்கப் போன ஜாக்ஸன் துரை மாதிரி "எங்கு வந்தாய் எதற்கு வந்தாய்" ரீதியில் தான் பசங்களிடம் வரவேற்பு இருந்தது. நமக்கு இந்தக் கழிசடைகளைப் பற்றி என்ன கவலை. பராசக்தி ஜிகிடிகள கடைக் கண் காட்டினால் போறாதோ? குலுக்கல் முறையில் ஒரு அதிர்ஷ்டசாலி ஜிகிடியைத் தேர்ந்தெடுத்து நைசாக நூல் விட்டேன். ஜொள்ளாண்டவர் கருணையே கருணை அந்த ஜிகிடி எனது அடுத்த வீட்டு நண்பியின் சினேகிதியாம். இது போறாதா...கருணைக் கதாட்சம் அமோகமாய் இருந்தது. லோகச் ஷேமத்தைப் பற்றி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திருநெல்வேலி நண்பர்களுக்கு முதலில் இஞ்சி தின்ற மாதிரி இருந்தது. அப்புறம் போகப் போக எல்லாருமே எல்லோருடன் பேசி பழக்கமாகிவிட்டதால் நல்லதொரு பல்லகலைக்கழகம் குடும்பமானது. என்னென்ன போட்டிகளில் யார் யார் கல்ந்துகொள்வது என்ன பாட்டு பாடுவது டான்ஸ் ஆடுவது என்று அன்றிரவு விடிய விடிய விவாதித்தோம். மொத்தத்தில் ஒரு டீமாக பெரும்பாலான போட்டிகளிலும் கலந்துகொள்ள எங்களைத் தயார் செய்துகொண்டோம். மிருதங்கம், டோலக்கு, டிரம்ஸ் என்று எனக்கு சொத்து பிரித்துக் குடுத்துவிட்டார்கள். இது போல மற்றவர்களுக்கும். டான்ஸ் மட்டும் பராசக்திகள் ஹோல்சேலில் எடுத்துக்கொண்டார்கள்.

பாட்டுக்கும் டான்ஸுக்கும் நான் தான் வாத்தியம் வாசித்தேன். பயிற்சியில் அவர்கள் ஆடும் போது ராஜா பட்ங்களில் வருவது மாதிரி "சபாஷ் சரியான் போட்டி" என்று தனியாளாக தொடையைத் தட்டிக் கொண்டு ரசிப்பதற்க்கு முந்திய ஜென்மத்த்து குடுப்பினை வேண்டும். "இல்லியே இங்க தாளம் தப்பறதே" என்று அங்கங்கே விஷயம் தெரிந்த மாதிரி பந்தா விட்டுக் கொள்வேன். ஜிகிடிகளும் எனக்கென்னவோ எல்லாம் தெரியும்ங்கற மாதிரி "இப்போ சரியா இருக்கா..." என்று திரும்ப பாடியோ ஆடியோ காட்டுவார்கள். கூட இருந்த திருநெல்வேலி பிரகஸ்பதிகளுக்கு வயத்தெரிச்சல் சொல்லி மாளாது. ஆனால் ஒன்று இவ்வளவு அன்யோன்யமாக பழகும் போது மனதில் கல்மிஷம் எல்லாம் ஓடிப் போய்விடும் எனக்கும் அப்பிடி தான் என்று சொன்னால் நீங்களும் நம்பப் போவதில்லை என் மனைவியும் நம்பப் போவதில்லை. எனக்கு இந்தப் பெண்ணை ரொம்ப நல்லாத் தெரியும்ங்கற வெத்து பந்தாக் கேஸ் தான் நான் அப்போதெல்லாம் (இப்போ அதுவும் இல்லாத பரம சாது :) ).

அடுத்த நாள் விழாவிற்கு எங்கள் கல்லூரியிலிருந்து வானரப் படை வந்திறங்கியது. நான் பராசக்தி ஜிகிடிகளோடு அன்யோன்யமாக இருப்பதை அவர்கள் பார்க்க வேண்டுமே என்று எனக்கு கவலை. இந்த மாதிரி விஷயங்களில் தெரியாதவர்களின் வயத்தெரிச்சலை விட தெரிந்தவர்கள் வயத்தெரிச்சலைப் பார்ப்பதே ஒரு தனி ஆனந்தம் பாருங்கள். சங்கராபரணம் மாதிரி ஜிகிடிகள் டான்ஸ் ஆட நான் மட்டும் மிருதங்கம் வாசிக்கும் சுபலக்னத்தில் ஒரு பையனை விட்டு எல்லாரையும் கூட்டி வரச் செய்தேன். கிளம்பிய வயத்தெரிச்சலில் ஒரு ஊரே உலை வைக்கலாம்.

"டேய் எல்லாம் கரெக்டா இருக்கா...எதாவது வேணுமா...ரவையெல்லாம் இருக்கா..நான் வேணா மிருதங்கத்த கொண்டு வரட்டுமா...எதாவது ஹெல்ப் வேணும்னா கூச்சப் படாம கேளு. நம்ம காலேஜ் மானத்த காபாத்திரனும் என்ன" - எங்க டீமில் ஜிகிடிகள் இருந்ததால் காலேஜ் வானரங்கள் கூச்சமே இல்லாமல் பல்டி அடித்ததுகள்.

டீமில் ஜிகிடிகள் இருந்த்தால் மற்ற டீம் ஜிகிடிகளும் சகஜமாக பழகினார்கள். ரவை உப்புமா செய்வதற்கு மட்டுமில்லாமல் மிருதங்கம் வாசிக்கவும் பயன்படும் என்று நிறைய ஜிகிடிகளுக்கு க்ளாஸ் எடுத்தேன். ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் மாதிரி எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் திரும்பிய பக்கமெல்லாம் கடலை சாகுபடி தான்.

போட்டிகளில் பட்டையைக் கிளப்பினோம். பெரும்பாலான போட்டிகளில் வென்று கேடயத்தையும் கைப்பற்றினோம். லோக்கல் யுனிவர்ஸிட்டி, பராசக்தி ஜிகிடிகள் என்பதால் சப்போர்ட்டுக்கு கேட்கவே வேண்டாம். எனக்கு தங்க முலாமில் பூசிய வெள்ளிப் பதக்கம் கிடைத்தது - கடலை போட்டதற்கு அல்ல மிருந்தங்கம் வாசித்தற்கு.

நான் தாளம் வாசிக்க பராசக்தி ஜிகிடிகள் நடனம் ஆடிய விஷயம் போட்டோவுடன் தினமலரில் வந்தது காலேஜில் என்னுடைய பராக்கிரமத்தை பரப்ப உதவியது. அதற்கப்புறம் கடலைப் பருவம் மாறி வாழ்க்கையில் முக்கியத் திருப்பங்கள் நிகழ்ந்தன.


--இன்னும் ஜொள்ளுவேன்


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

Monday, October 31, 2005

தீபாவளிப் பார்ட்டி படங்கள் 

மொத்தம் ப்ரேமலதா அக்கா புண்யத்தில் ஐந்நூற்றுக்கும் மேலாக படங்கள். அவ்வளவையும் அவர்கள் அப்லோட் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே சாம்பிளுக்கு சில.

"உன்னால் முடியும் தம்பி" டுபுக்கு


சக்ராவிற்கு தங்கச் சங்கிலி பரிசு

கிடார் பென்ஞ்சமின்

மஹாலிங்கம் ஜோடிக குத்து


டுபுக்கு ஜோடி குத்து

இதான் ஒரிஜினல் குத்து - சக்ரா, டுபுக்கு

சுரேஷ் ஜோடி குத்து

விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற அணி

மழலை விளையாட்டு


மற்றவைக்கு ப்ரமேலதா அக்கா ப்ளாக்கிற்கு செல்லவும். (யெக்கோவ்...ஹிட்டுக்கு இவ்வள்வுன்னு பேசின அமௌன்ட குடுத்திறனும்...சொல்லிட்டேன் ஆமா)


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

தீபாவளி வாழ்த்துக்கள்! 

சொன்ன மாதிரி வெள்ளிக்கிழமை பதியமுடியவில்லை. மன்னிக்கவும். வேலைப் பழு மிக அதிகமாகிவிட்டது. அதோடு தீபாவளி பார்டி வேறு. தீபாவளி பார்ட்டி மிக ஜாலியாக இனிதே நடந்தது. எல்லோருக்கும் காலேஜ் நாட்களுக்குச் சென்று வந்த நிறைவு. வலைப்பதியும் கும்பலிலிருந்து நான், சக்ரா, சுரேஷ், ப்ரேமலதா ஆகியோர் கல்ந்த்டுகொண்டோம். மொத்தம் ஐம்பது பேர் என்று நினைக்கிறேன். பெரும்பாலோனோர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். மிக அழகான மேடை, பல மைக்குகளுடன் கூடிய அற்புதமான ஸ்பீக்கர் ஸிஸ்டம் வேறு. தனிப் பாட்டு, கிடார், கீபோர்ட், ஜோடிப் பாட்டு என்று பாட்டுக்களில் பலவகை. தனிக் குத்து, கும்மிக் குத்து, பாம்பு டான்ஸ், ஜோடி நடனம் என்று எல்லோரும் குத்து குத்துவென செம குத்து குத்தினார்கள். நிறையபேர்களை சந்தித்தேன். நிறைய எழுத வேண்டும்....பிறகு முயற்சிக்கிறேன். என்னமோ இப்போது ப்ளாகரிலிருந்து படங்கள் அப்லோட் செய்ய முடியவில்லை. சாயங்காலம் மீண்டும் முயற்சிக்கிறேன்.

மற்றபடி தீபாவளி வாழ்த்துக்கள்!!


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

Tuesday, October 25, 2005

அறுசுவை 

போன வாரம் ரொம்ப பிஸியாக ஓடி விட்டது. வீட்டில் மனைவிக்கு உடல் நலக் குறைவு. ஐய்யா தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. குழந்தை பராமரிப்புலேர்ந்து சமையல் நேரம் வரை பார்பதற்குள் எட்டு புள்ளை பெத்த மாதிரி உடம்பு பென்ட் நிமிர்ந்துவிட்டது. பொதுவாக மனைவி சில ஸ்பெஷல் பதார்த்தங்கள் செய்தால் என்னிடம் தான் உப்பு, உரப்பு சரியாக இருக்கா என்று பார்க்கச் சொல்லுவார். இதனாலேயே எனக்கு மனதில் அறுசுவை நடராஜன் என்று நினைப்பு இருப்பதாக அடிக்கடி மரியாதை செய்வார்.

ஸ்பெஷல் பதார்த்தங்களுக்கே உப்பு உரப்பு பார்க்கும் எனக்கு சாதரண சமையலா பெரிது என்று சென்னா மசாலா செய்ய இறங்கினேன். தேவையான கிரேவி தயாரானதும் உப்பு உரப்பு ஸ்டையிலா போட்டு ஸ்பூனால் எடுத்து டேஸ்ட் பார்த்தால் ஒரே உப்புக் கரிப்பாக இருந்தது. சரி கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் விட்டு சரி பண்ணிவிடலாமென்று விட்டு விட்டு மீண்டும் சரி பார்த்தால் உப்பே இல்லை. அப்புறம் தான் மணடையில் உரைத்தது. உப்பு போட்ட ஸ்பூனாலே டேஸ்ட் பார்த்தேன் என்று. மீண்டும் கொஞ்சம் உப்பைப் போட்டு விட்டு சரி பார்த்தால் சரியாகி இருந்தது. டின்னில் இருந்து சென்னாவை போட்டு கொதிக்கவிட்டு பார்த்தால் மீண்டும் உப்புக் கரியாக இருந்தது. கடங்காரன் டின்னில் உப்புத் தண்ணியில் சென்னாவை வைத்திருக்கிறான். சரி மீண்டும் எலுமிச்சாபிஷேகா தான் என்று தெளித்ததில் மூடி சென்னாவில் உள்ளே விழுந்து ஜூஸ் பொல பொலவென சென்னாவில் கொட்டிவிட்டது. மூடியை சென்னாவில் தேடி எடுக்கும் போதே தெரிந்துவிட்டது என்ன லட்சணமாக இருக்குமென்று. கர்பஸ்தீகள் கூடத் தொடமாட்டார்கள் அப்பிடி ஒரு புளிப்பு. இருந்தாலும் தேவாமிர்தமாக இருக்கு என்று சொல்லிக்கொண்டே முழுங்கி வைத்தேன். "உனக்கு உடம்பு சரியில்லை சென்னா மசாலா சாப்பிடக்கூடாதென்று டாக்டர் சொல்லி இருக்கார்" - மனைவிடம் வள்ளுவர் பெயரால் பொய்மையும் வாய்மையிடத்திவிட்டு சொன்ன கையோடு மிச்சத்தை ஆபிஸுக்கு எடுத்துக் கொண்டு போய் தூரப்போட்டிருக்கவேண்டாமோ...மனுஷன் சாப்பிடுவானா இத என்று மனதிற்குள் சொல்லிவிட்டு கையை வீசிக்கொண்டு சென்று பிட்ஸா சாப்பிட்டுவிட்டேன். ஆத்துக்காரர் ஆசையோடு பண்ணிவைச்சதை டேஸ்ட் பார்த்துவிட்டு "இதெல்லாம் ஒரு பொழப்பா..." என்று நேற்றெல்லாம் ஒரே புகழாரம் தான்.

மற்றபடி தீபாவளி பார்ட்டி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. வருகிறவர்கள் எண்ணிக்கை 51 தொட்டுவிட்டது. இடத்திற்கு சொல்லியாகிவிட்டது, சாப்பாடுக்கு சொல்லியாகிவிட்டது. வேலைகள் மளமளவென்று நடந்துகொண்டிருக்கிறது. நான் சக்ரா பாலன் என்று கான்பரன்ஸ் கால் போட்டு நல்லா அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம். இது போக இதுபற்றி திருமதி.உமா கிருஷ்ணாவிடம் வேறு அரட்டை. பிரமேலதா பாலன், உமா கிருஷ்ணா என்று ஒரு கூட்டமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். பாட்டு, ம்யூஸிக் , நடனம் என்று ஒரே கும்மாளமாய் இருக்கிறது. நாளைக்கு விளையாட்டுக்களைப் பற்றி சொல்கிறேன். பார்டி மூலமாகவும் இந்த ப்ளாக் மூலமாகவும் புதிதாக நிறைய நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன். அடுத்த ஜொள்ளித் திரிந்த காலத்தை வெள்ளிக்கிழமைக்குள் பதிந்து விடுகிறேன். அதுவரைக்கும்...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

Wednesday, October 19, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...9 

For previous Parts -- > Part 1      Part 2    Part 3    Part 4    Part 5    Part 6    Part 7    Part 8

வறுக்காத ரவை கேட்டதும் கண்ணாடிக் கிளி ரொம்பவே குழம்பிப் போனாள்.
"ரவையா?
"ஆமாம் கேசரி செய்வார்களே அதே ரவை"
"கேசரியா?!%?"
"ஆமாம் பெண் பார்க்க வரும்போதெல்லாம் செய்வார்களே..கேசரி"
இந்த மாதிரி விழாக்களில் பையன்கள் சகட்டு மேனிக்கு கலாய்ப்பான்கள் என்பதால் நான் அவளை கலாய்க்கிறேன் என்று முடிவே கட்டிவிட்டாள்.
"இப்ப உங்களுக்கு என்ன வேண்டும்..."
"ரவை வேண்டும்..வறுக்காதது"
"..." அவளுக்கு என்னத்திற்கு ரவை வேண்டும் அதுவும் வறுக்காத ரவை வேண்டும் என்று புரியவே இல்லை. நான் அவளுக்கு கேசரி செய்ய சொல்லிக்குடுக்கலாமா இல்லை மிருதங்கம் வாசிக்கும் முறை பற்றிச் சொல்லிக்குடுக்கலாமா என்று யோசிப்பதற்குள் அடியில் பற்றிக் கொண்டால் போல் ஒருவன் ஓடிவந்தான்.
"ஹீ வான்ட்ஸ் கேசரி..ஐ டொன்ட் நோ வொய்" - கிளி அவனிடம் இங்கிலீஸில் பாட்டு பாடியது.
"கேசரியா..?"
"இல்லை கேசரி செய்யற ரவை...மிருதங்கம் வாசிக்கறதுக்கு கொஞ்சம் வறுக்காத ரவை வேணும்"
"மிருதங்கத்துக்கு ரவையா... எதுக்கு?" - நான் கடலை போடுவதற்கு என்னமோ ரவை கேட்ட மாதிரி மிரட்டினான்.

கிளி கேட்டிருந்தாலாவது விலாவாரியாக சொல்லியிருப்பேன்.. இந்தத் தடியனுக்கு சொல்லிக்குடுப்பதற்கா எங்க மாமா என்னை மிருதங்கம் படிக்க வைத்தார்..

"ரவை இல்லாட்ட மிருதங்கத்தில் சரியா சத்தம் வராது. தொட்டு தொட்டுன்னு தான் வரும்"

"ஏன் தொட்டுனக்கு தொட்டுனக்குன்னு தான் வாசிங்களேன்.." - நக்கல்

தொட்டு நக்கறதுக்கு இதென்ன மாம்பழப் பச்சடியா.. கேட்டிருப்பேன் வேளைக்கு இருபது இட்லி நோகாம சாப்பிடுவது மாதிரி திடகாத்திரமாக இருந்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது. "இல்ல வறுக்காத ரவை கிடைக்குமா.." என்று பழைய பல்லவியையே பாடினேன்.

"எங்க காலேஜில் ரேஷன் கடையெலாம் இல்ல சாரி ஹீ ஹீ" கிண்டல் அடித்துவிட்டு கிளியைப் பார்த்து சிரித்தான். பக்கத்தில் கிளி இருந்தால் எல்லாப் பையன்களுக்கும் வரும் நக்கல் சின்டிரோம் தான். கிளியும் சுமாராய் சிரித்து வைத்தது.

"....உங்க காலேஜில் ஹாஸ்டல் இருக்குமே அங்கே மெஸ் என்று ஒன்று இருக்குமே அங்கே கேட்டால் கிடைக்கும் அதான் கேட்டேன்" - கிளி நான் கடலை பார்ட்டி என்ற சந்தேகம் போய் ஜென்டில்மேன் தான் என்று புரிந்து கொண்ட மாதிரி தெரிந்தது.

மேற்காலே போய் பீச்சாங்கைப் பக்கம் போன்னு வழிகாட்டிவிட்டான். கிளிக்கு மட்டும் "ரொம்ப தேங்ஸ்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

போகிற வழியில் எதுக்கும் இருக்கட்டும் என்று பரதநாட்டியப் பெண்களிடமெல்லாம் வறுக்காத ரவை கிடைக்குமா என்று வறுத்துக் கொண்டே போனோம். மெஸ்ஸில் ரவை கிடைத்து வாங்கிக் கொண்டுவரும் போது அந்தப் பெண்களிடம் ரவை கிடைத்து விட்டது எங்களுக்காக கஷ்டப்பட்டுத் தேடவேண்டாமென்று திருப்பியும் ஒரு தரம் வறுத்து விட்டுப் போட்டியில் வாசித்தேன். கண்ணாடிக் கிளி நான் எப்பிடி வாசிக்கிறேன் என்று பார்த்துவிட்டு கை தட்டினாள்.

இப்படியாக நான் யூத் பெஸ்டிவல் போய்வந்துகொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டுப் பல்கலைகழங்களுக்கு இடையே நடத்தும் இன்டர் யுனிவேர்ஸிட்டி பெஸ்டிவல் நடத்தும் பொறுப்பு எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்தது. இந்த விழா எங்கள் ஊருக்கு பக்கத்திலிருக்கும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடப்பதாக முடிவாகியிருந்தது. மிகவும் அருமையான இடம். பொதிகை மலையில் அமைந்திருக்கும் கல்லூரி இது. மலையில் ரொம்பவும் ஏறாமல் ஆரம்பத்திலேயே இருக்கும். கல்லூரி அமைந்த இடமே ரம்மியமாய் இருக்கும்.

போட்டி காலேஜ்களுக்கிடையே இல்லாமல் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடக்கும் என்பதால் எங்கள் பல்கலைக்கழக குழுவை தேர்ந்தெடுப்பதற்காக எங்கள் மாவட்ட கலூரிகளுக்கிடையே போட்டி வைத்தார்கள். அவற்றில் சிறந்தவர்களை ஒரு குழுவாக எங்கள் யுனிவர்ஸிட்டி சார்பாக பங்கேற்க வைப்பார்கள்.

இந்த இடத்தில் குற்றாலம் பராசக்தி கல்லூரி பற்றி சொல்லிவிட வேண்டும். குற்றாலம் என்றால் உங்களுக்கு அருவி நியாபகத்துக்கு வந்தால் எங்க ஊர் வயசுப் பசங்களுக்கு பராசக்தி கல்லூரி தான் நியாபகம் வரும். அவ்வளவு அருமையான கல்லூரி. பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய டீம்ட் யுனிவர்ஸிட்டி. அதுவும் எங்கள் கல்லூரி தான் அவர்களுக்கு அந்த வட்டாரத்திலேயே பக்கம் என்பதால் இரு கல்லூரிகளுக்குமிடையே இருக்கும் இணக்கம் அதிகம்.

தகுதிப் போட்டியே பலமாக இருந்தது. தகுதிப் போட்டி முடிந்ததும் உடனே முடிவை அறிவிக்காமல் ஊருக்குப் போய் லெட்டர் போடுகிறோம் என்கிற ரீதியில் அறிவித்தார்கள். இல்லாவிட்டால் காலேஜுகளுக்குள் சண்டை வரும் என்று நினைத்தார்கள் போலும். நானும் சரி ஆச்சு அம்புட்டுத்தான் என்று வந்துவிட்டேன். போட்டி நடப்பதற்கு முந்தின நாள் வரை தகவலே இல்லை. முந்தின நாள் குண்டு வாத்தியார் க்ளாஸ் நடக்கும் போது நடுவில் வந்து நான் செலெக்ட் ஆகியிருப்பதாகச் சொன்னார். மெடல் வாங்கிவந்தால் காலேஜுக்குப் பெருமை என்று இன்னும் எதெல்லாமோ சொன்னார். எனக்கு எங்க டீமில் வேறு யார் யார் இருப்பார்கள் என்று தயக்கம். ஒருவழியாக லிஸ்டை நைசாக லவட்டிப் பார்த்தேன்.


எங்கள் யுனிவர்ஸிட்டி குழுவில் மொத்தம் பதினாறு பேர்கள். பத்து பெண்கள் - அனைவரும் பராசக்தி கல்லூரியிலிருந்து. என்னையும் சேர்த்து ஆறு ஆணக்ள். ஐந்து பேர் திருநெல்வேலி கல்லூரிகளிலிருந்து. அட்ரா சக்கை அட்ரா சக்கை...மனம் குதூகலித்தது.


--இன்னும் ஜொள்ளுவேன்


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

Wednesday, October 12, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...8 

For previous Parts -- > Part 1      Part 2    Part 3    Part 4    Part 5    Part 6    Part 7



கல்லூரி நாட்கள் பெரும்பாலும் எல்லோருக்குமே இனிமையாகத் தான் இருந்திருக்கவேண்டும். எனக்கும் தான். அதிலும் கல்லூரி நாட்களில் "யூத் பெஸ்டிவல்" என்று அழைக்கப்படும் கலை நிகழ்சிகள் நிறைந்த விழாக்களின் பெயரால் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அட்டென்டன்ஸ் விழுந்துவிடும் என்பதால் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னாலேயே பயிற்சி என்ற பெயரிலே வால்தனத்தை ஆரம்பித்துவிடுவோம். நான் பள்ளிக் காலங்களிலிருந்தே பேச்சுப் போட்டி, மிருதங்கம், டம்ப் சேரட்ஸ், அந்தப் போட்டி, இந்தப் போட்டி என்று கோட்டி பிடித்து அலைந்து கொண்டிருப்பேன். எல்லாக் கல்லூரிகளிலும் இந்த மாதிரி போட்டிகளுக்குப் போவதற்கென்றே ஒரு டீம் இருக்கும். நான் முதல் வருடம் படித்த போது எங்கள் கல்லூரியில் அந்த மாதிரி ஒருத்தரும் இல்லை. பேச்சுப் போட்டி பொறுப்பை மட்டும் ஒரு ஆசிரியர் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை நச்சரித்துப் புடுங்கி ஸ்பான்சர்ஷிப்பை பேச்சுப் போட்டியிலிருந்து மெதுவாக மிருதங்கப் போட்டிகளுக்கும் விஸ்தரிப்பு செய்தேன். ஆனாலும் நான் மிருதங்கத்தை சுமந்து கொண்டு வந்தால்
"வந்துட்டியா வா..என்னடா காணோமே பார்த்தேன். இன்னிக்கு எங்கப்பா கொட்டடிக்கப் போற?" என்று எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்குகிற ரீதியில் தான் பேசுவார். கொஞ்ச நாளில் பொறுப்பு இன்னோர் சங்கீத ஞானம் நிறைந்த வாத்தியார் கையில் போயிற்று. அவர் கொஞ்சம் பரவாயில்லை. கலைத்துறையில் உறுப்பினராய் இருந்ததால் போட்டிகளுக்கு போவதற்கு நிறைய ஊக்குவிப்பார். ஆனால் அவரிடம் இம்சைகள் வேறு விதமாய் இருக்கும்.

"தம்பி இன்னிக்கு நம்ம பெருமாள் கோவில்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா பாட்டுப் பாடறாங்க நல்ல பாடுவாங்க...மிருதங்கம் வாசிக்க ஒரு ஆள் வேணும்ன்னு கேட்டாங்க...நான் தான் நீயிருக்கன்னு சொல்லியிருக்கேன்...சாயங்காலம் வீட்டுக்குப் போயிடாத என்ன ..". மனுஷன் உசிர விட்டு வாசிச்சா கடைசியில் ரெண்டு தேங்காய் மூடியும், லொளு லொளு பழமும் தருவார்கள். கூடக் கொஞ்சம் சுண்டல் கிடைக்கும். மாமியிடம் தேங்காய் மூடியைக் கொடுத்தால் அடுத்தநாள் இட்லிக்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி கிடைக்கும்.

இந்த தேங்காய் மூடிக் கச்சேரி அடிக்கடி நடக்காதென்பதால் பொறுத்துக் கொள்வேன். முதலில் யூத் பெஸ்டிவல்களுக்குத் தனியாக போய்க்கொண்டிருந்தேன். எல்லா யூத்பெஸ்டிவல்களிலும் கல்லூரிகளிலும் வரவேற்பதற்கும், ரெஜிஸ்டிரேஷனுக்கும் இருப்பதிலே நன்றாக இருக்கும் மூன்று பெண்களும் அவர்களிடம் கடலை போட்டவண்ணம் இரண்டு ஆண்களும் இருப்பார்கள். இவர்கள் தான் பெயர் சரி பார்த்து, பதிந்து, தங்கும் வசதிகள் பற்றி சொல்லி, அடையாள அட்டை வழங்குவார்கள். பதிவு செய்யும் போது அந்தப் பெண்களிடம் கூட இரண்டு வார்த்தை பேசிவிட்டால் அவ்வளவு தான், கூட இருக்கும் கடலைப் பார்ட்டிகளுக்குப் பொறுக்காது. நான் தனியாக போகும் காலத்தில் இவர்களிடம் ரொம்ப வைத்துக்கொள்ள மாட்டேன். ஓரமாக உட்கார்ந்து கண்ணோடு கான்பதெல்லாமோடு சரி.

இந்தப் பிரச்சனைக்காகவே கல்லூரியில் மெதுவாக யூத் பெஸ்டிவலின் அருமை பெருமைகளைச் சொல்லி ஒரு கலைக் கூட்டத்தைச் சேர்த்தேன். பெரிய கூட்டமெல்லாம் இல்லை மிஞ்சி மிஞ்சிப் போனால் மொத்தம் ஐந்து பேர் இருப்போம். ஒருத்தன் நன்றாகப் பரதநாட்டியம் ஆடுவான். ஒருத்தன் நன்றாக படம் வரைவான். மத்த ரெண்டு பேரும் உப்புக்குச் சப்பாணி கேஸ். சும்மா எதாவது ஒரு போட்டி என்ற பெயரில் வரும் பறவைகளை வாய் பார்க்க வருவார்கள். இந்த போட்டிகளுக்கெல்லாம் திருச்சி வரையிலும் உள்ள கல்லூரிகளில் இருந்து வருவார்கள். நல்ல வேளை மெட்ராஸில் இருந்து வர மாட்டார்கள். வரும் கூட்டத்தின் பந்தாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாரும் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து இப்போது தான் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் வருவது மாதிரி தாங்க முடியாமல் இருக்கும். எங்கள் ஐவர் குழுவிற்கு ஃபேஷன் என்றால் வெத்தலபாக்கு வைத்து குடுக்கும் பேஸனைத்(தட்டு) தவிர எதுவும் தெரியாது. அதுவும் மிருதங்கத்தை முதுகில் சுமந்து கொண்டு ரெஜிஸ்டிரேஷனுக்கு போனாலே "கரகாட்டக்காரன்" ராமராஜன் கும்பல் வந்த மாதிரி தான் லுக்குவிடுவார்கள். இருந்தாலும் இதுக்கெல்லாம் அசர மாட்டோம். ஆனால் இந்த கிடார் வைத்திருக்கும் பையன்களின் அலம்பல் தாங்கமுடியாது. சேர்ந்தாப்புல நாலு பெண்கள் வந்தால் போதும் உடனே மரத்தடியில் கடையை விரித்து வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள். நின்று கொண்டுவாசிப்பான், முட்டி போட்டுக்கொண்டு வாசிப்பான், தலையை சிலுப்பி விட்டுக் கொண்டு வாசிப்பான், ஆடிக் கொண்டே வாசிப்பான் - சேட்டை தாங்க முடியாது.

நானும் ஒருதரம் தில்லானா மோகனாம்பாள் டி.எஸ்.பாலைய்யா மாதிரி மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு உசிர விட்டு வாசிச்சு பார்த்தேன்...ம்ஹூம் ஒன்னும் தேறல. இருக்கற பெண்கள் கூட்டமெல்லாம் கிட்டார் மரத்தடியில் தான் கூடியது. அப்புறம் நானும் ஒரு கிட்டார் பையனை ப்ரெண்டு பிடித்து அவன் கிடார் வாசிக்கும் போது கிடார் பையை கடன் வாங்கிக் கொண்டு, வெறும் பையை தோளில் மாட்டிக் கொண்டு கிழக்கயும் மேற்கயும் அலைந்து பொண்ணுகளிடம் கடலை தேற்றுவேன். வெறும் கிடார் பையை வைத்துக் கொண்டே அவனோட கடலை சாகுபடியை நான் கெடுக்கிறேன் என்று கடுப்பாகி அந்தப் பையன் அப்புறம் கிடார் பையைக் கடன் குடுப்பதை நிப்பாட்டி விட்டான்.

மிருதங்கம் வாசிப்பதற்கு சில விஷயங்கள் இருக்கிறது. இதை "கொட்டு" என்று யாரவது சொன்னால் எனக்கு கொஞ்சம் கோபம் வரும். மண்டையில் கொட்டிவிடுவேன். மிருதங்கத்தின் இடது கைப் பக்கத்தில் ரவையை (உப்புமா செய்வார்களே அதே சூஜி தான்) தண்ணியில் நனைத்து கோந்து மாதிரி உருட்டி ஒட்ட வேண்டும். இது வாசிப்பதற்கு முன்னால் தான் செய்யவேண்டும். ரொம்ப முன்னாடியே ஒட்டிவிட்டாலோ , பதமாக இல்லாவிட்டாலோ சத்தம் நன்றாக இருக்காது. இதற்காகவே வறுக்காத ரவையை ஒரு சின்ன டப்பாவில் எடுத்துக் கொண்டு போக வேண்டும். ஒரு முறை இந்த ரவை டப்பாவை மறந்து விட்டுப் போய்விட்டேன். போட்டி ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால் தான் கவனித்தேன். ரவைக்கு எங்கு போவது? இன்னிக்கு கோவிந்தா தான் என்று நினைத்தேன். போட்டியில் பெயர்களை ஒரு அழகான கண்ணாடி போட்ட கிளி மைக்கில் அறிவித்துக்கொண்டிருந்தது. மிருதங்கத்தை முதுகில் தூக்கிக் கொண்டு நேர அவளிடம் போய் நின்றேன்.
"இன்னும் போட்டி ஆரம்பிக்கவில்லை...நான்...உங்கள் பெயரை கூப்பிட்டதுக்கப்புறம் நீங்க வந்தாப்.."
"இல்ல கொஞ்சம் வறுக்காத ரவை கிடைக்குமா?..."
"..."


--இன்னும் ஜொள்ளுவேன்




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?