<$BlogRSDUrl$>

Thursday, February 26, 2004

நானும் சங்கீதமும் 

எனது மாமா பூஸ்ட்டுக்கு பதிலாக கர்நாடக சங்கீதத்தை கரைத்துக் குடித்தவர். காலை 5 மணிக்கெல்லாம் சாதகம் பண்ணுவது போக கிடைத்த நேரமெல்லாம் தியாகராஜரையும், முத்துசுவாமி தீக்ஷ்சிதரையும் பாடுவது வழக்கம். இது போக சாயங்காலம் சங்கீத வகுப்புகள் வேறு நடக்கும். நிறைய பெண்கள் வந்து சங்கீதம் சொல்லிக் கொள்வார்கள். 'திருதிரு' என்று முழித்துக் கொண்டிருந்த என்னையும் உட்கார்ந்து அவர்களுடன் பாட்டு கற்றுக் கொள்ள சொன்னார். நானும் உட்கார்ந்து தொடையை தட்டி (என் தொடையை தான்) ச.ரீ.க.மா-விநேன். அடுத்த நாள் காலையில் சாதகத்துக்கு எழுப்பி பார்த்தார். சாதகமாவது மோதகமாவது போர்வையை நல்ல இழுத்து போர்திக் கொண்டு தூங்கினேன். ஒரு வாரம் கழித்து 'அவனுக்கு பொம்மனாட்டிகளோடு உட்கார்ந்து கத்துக்க வெட்கமா இருக்காம் தனியா கத்துப்பானாம்' என்று மாமி விடு தூது அனுப்பினேன்.(வெட்கமெல்லாம் இல்லை சும்மா).அப்புறம் 'தனியாவது மிளகாயாவது' நைஸாக கம்பி நீட்டி விட்டேன். சின்ன வயதில் இருந்து வாளி, பாத்திரம் என்று எல்லாத்திலும் மிருதங்கம் வாசிப்பேன். அதனால் மாமவோடு கச்சேரிக்கு போகும் போது பாட்டை பார்க்காமல் மிருதங்கம் வாசிப்பவரையே நோட்டம் விடுவேன். சரி இதில் தான் பையனுக்கு ஆர்வம் போல என்று மாமாவும் ஊக்குவித்தார். கச்சேரி முடிந்து கடைசி பஸ்ஸை பிடிக்க ஓடிக் கொண்டிருந்த மிருதங்க வித்துவானை(என் குரு) விடாபிடியாக வீட்டுக்கு கூட்டி வந்தேன். அவரும் ஒத்துக் கொள்ளா விட்டால் பஸ்ஸை பிடிக்க விடமாட்டான் என்ற பயத்தில் சொல்லிக் கொடுக்க ஒத்துக் கொண்டார்.இரண்டு வருடம் ஆர்வமாக கத்துக் கொண்டேன். ஸ்கூலில் வயலின் கத்துக்கற நண்பனும் நானும் ஆண்டு விழாவிற்கு கட்சேரி பண்ணுகிறோம்ணு வேஷ்டி எல்லாம் கட்டிக் கொண்டு கூத்தடித்தோம். மார்கழி மாத பஜனைக்கு மிருதங்கம் வாசித்தேன். கூட கொஞ்சம் பொங்கல் குடுத்தார்கள். ஒரு நாள் யாரோ வரவில்லை என்று திடீர் உப்புமா கதையாக எனக்கும், என் நண்பனுக்கும் மிருதங்க அரங்கேற்றம் இனிதாக நடந்தேறி, ஆளுக்கு ஒரு தேங்காய் மூடியும் அழுகின பழமும் கிடைத்தது.'மிருதங்க சக்கரவர்தி' படத்தை பார்த்து தலைக்கேறி வாழக்காயை வைத்துக் கொண்டு மிருதங்கத்தை விளாசிப் பார்த்தேன். கை தான் பழுத்தது. காலேஜ் காலத்தில் வித விதமா பெண்குட்டிகள் வருவார்களே என்று போட்டிகளுக்கு போனதில் ஒன்னுக்கும் உபயயோகப்படாத மெடல்கள் நிறைய கிடைத்தது. ஒரு ஜிகிடி "நீங்கள் நன்றாக கொட்டு வாசிக்கிறீர்கள்" என்றாள். என்னமோ தியாகராஜ பாகவதரின் பேரன் மாதிரி "கொட்டா?? அது மிருதங்கம்!!" என்று ஒதுங்கி போனேன். நம்ம திறமைக்கு இவ்வளவு தான் தேறும் போலனு நினைத்த போது தியாகராஜரின் கருணையெ கருணை வாழ்க்கை பரிசாக என் மனைவி கிடைத்தாள்.(எப்பிடி என்ற விபரமெல்லாம் அப்புறம் :P) ஆனா என்ன, நான் பாட்டு பாடினா 'உஙக அப்பாக்கு என்ன ஆச்சு? ஏன் இப்பிடி அழறார்?' என்று செல்ல மகளிடம் நக்கல் விடுகிறாள். இப்பவும் கோவிலுக்கு போனால் தவில்காரரை ஆர்வத்துடன் பார்ப்பேன். அவரும் நான் பார்க்கிறேன் என்று பந்தா பண்ணிக் கொண்டு வாசிப்பார். ஐய்யோ பாவம், அவர் கஷ்டம் எனக்கும் தெரியும்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

நான் முதலும் கடைசியுமாக பிடித்த சிகரெட் 

அலுவகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவர்களை பார்த்தேன். வயது பத்தோ பதினொன்றோ தான் இருக்கும். சற்று ஒதுக்கு புறமாக இருட்டான இடதில் நின்று கொண்டு அனயாசமாக புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். போலீஸ் பார்த்தால் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்ற பயமாக இருக்கலாம்.இரண்டு பையன்கள்கள்,மூன்று பெண்கள் மொத்தம் ஐந்து பேர். பையன்களுக்கு தொட்டு கொள்ள ஊறுகாய் போல இரண்டு பெண்களும் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது பெண் 'தேமே'ன்று கருமமே கண்ணாக ஊதிக் கொண்டிருந்தாள்.

எனக்கு நான் முதன் முதலில் கையில் பிடித்த சிகரெட் தான் நினைவுக்கு வந்தது. நான் முதலும் கடைசியுமாக பிடித்த சிகரெட் அது தான்.11வது படிக்கும் போது என்று நினைக்கிறேன். பக்கத்து வீட்டு நண்பனின் அக்காவுக்கு கல்யாணம். கேரளாவில் இருந்து அவன் சித்தப்பா பையன் வந்திருந்தான். அவனுக்கும் எனது வயது தான். அவன்,நான்,நணபன் முன்று பேருமாய் சேர்ந்து சிகிரெட் பிடிக்க முயற்சிக்க முடிவாயிற்று. இரவு 9.30 மணிக்கு முஹுர்த்தம் குறித்தாயிற்று.கல்யாண கூட்டத்தில் மாமா என்னை தேட மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு.

சிகரெட் வாங்க நான் வரமாட்டேன் என்று தீர்மானமாக சொன்னேன். உள்ளூர் கடைக்காரர்களை பற்றி நன்றாக தெரியும், மாமாவுடன் கடைக்கு போகும் போது "என்ன அம்பி அன்னிக்கு சிகரெட் வாங்கி போனீங்களே நல்லா இருந்துச்சா?" என்று வசமாக போட்டு குடுத்து விடுவார்கள்.

'மம்மூட்டி பிடிக்கற மாதிரி பீடி பிடிப்போம்டா' என்றான் கேரளாக்காரன்.

'அதெல்லாம் வேண்டாம் பஞ்சு வெச்ச சிகரெட் தான்' என்று முடிவு செய்தான் நண்பன்.

கேரளாக்காரனை சிகரெட் வாங்கி வர அனுப்பினொம். டூயூப் லைட்டு வெளிச்சம் இல்லாத, பன்றிகள் சரணாலயம் போல இருக்கும் ஒரு குட்டி முடுக்கை (திருநெல்வேலி வழக்கு - குட்டி தெரு) தேர்ந்தெடுத்தோம். நணபன் தான் முதலில் முயற்சி செய்தான். கண்ணில் ஜலம் வர இருமினான். கேரளாக்காரன் கைதேர்ந்வன் போல புகையை ஊதினான் (முன்னாலெயே பழக்கம் உண்டென்று அப்புறம் ஒத்துக் கொண்டான்). என் முறை வந்த போது கையெல்லாம் நடுங்க ஆரம்பிதது. வாய் தந்தி அடித்தது. பயத்தில் சிகரெட்டை வாயில் வைத்து உள்ளே இழுப்பதற்கு பதிலாக ஊதினேன். கேரளாக்காரன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான். என்னிடமிருந்து சிகரெட்டை பிடிங்கி இன்னும் ரென்டு இழுப்பு இழுத்துக் காட்டினான்.

'இப்பிடித்தான் பிடிக்கனும் தெரிஞ்சுதா?'

'எல்லாம் எங்களுக்கு தெரியும் இங்க கொண்டா' - வெட்கத்தில் அவனிடமிருந்து பிடுங்கினேன்.

'எலே அங்க எவம்லே சிகரெட் ஊதறது, இங்க வாங்கலே மூஞ்சிய பார்போம்' - இருட்டில் எங்கிருந்த்து குரல் வந்தது தெரியவில்லை யாரோ பெரியவரின் முரட்டு குரல். அவ்வளவு தான் ஆளுக்கொரு பக்கமாக் சிதறினோம். நான் இருட்டில் படுத்திருந்த பன்றிகளையெல்லாம் மிதித்துக் கொண்டு திரும்பி பார்காமல ஓடினேன். ஊரெல்லாம் சுற்றி வீட்டிற்கு வரும் போது மாமி காத்திருந்தாள்.

'எஙகடா போனே கோந்தே, கானோமேனு பார்த்துண்டு இருக்கேன். இதென்ன காலெல்லாம் சாக்கடை சகதி?' மாமி மிகுந்த ஆதங்கத்துடன் கேட்டாள் .

'ம்ம்ம்...ராமன் மாமாக்கு பாக்கு வாங்க போனேன்,வர்ர வழியில பன்னி முடுக்குல நாய் துரத்தித்து அடிச்சு பிடிச்சு ஓடி வர்ரென் அதான்'.

'ஓ..இனிமே அந்த வழியா வரதேடா கோந்தே' மாமி என்னை முழுதாக நம்பினாள்.

அது தான் நான் முதலும் கடைசியுமாக பிடித்த சிகரெட்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

நாவிதரான கதை 

நாவிதரான கதை
என்சான் உடம்புக்கு சிரசே பிரதானமாக இருந்த காலம் அது.நான் சொல்வது தலை முடி ஸ்டைலை பற்றி. எனக்கு அதில் விஷேசமான ஆர்வமெல்லாம் கிடையாது. எனது ஆரம்பகால முடி திருத்தும் சரித்திரம் அப்படி. வீட்டுக்கு ரொம்ப அடங்கின பிளளை நான். மாமா வீட்டில தான் வளர்ந்தேன். மாமா மிக கண்டிப்பானவர். அவருக்கு தலை வழுக்கையானாலும் மாதா மாதம் இசக்கியின் 'சந்திரா சலூனில்' முடி வெட்டிக் கொள்ள செல்ல வேண்டும். அப்பாவுடன் முடி வெட்டிக்கொள்ள செல்வதென்றால் ஜாலி. கையில் 50 பைசா தருவார். ஆனால் மாமா வீட்டிலே வளர்ந்ததால் அந்த சந்தர்பம் எப்போவாவது தான் கிடைக்கும். மாமா ஸ்கூல் ஹெட்மாஸ்டர். இசக்கியின் மகன்கள் மாமாவின் ஸ்கூலிலே படித்து வந்தார்கள்.அதற்காக மாமா சொல்வதை விட தாராளமாகவே முடி -வெட்டுவார் இசக்கி.அவர் தான் எங்களுடைய ஆஸ்தான முடி திருத்துபவர் என்பதால் அளவுகள் நன்றாக தெரியும்.

முதலில் எனக்கு வெட்ட சொல்லி விட்டு மாமா பேப்பர் படிப்பார்.நடுவில் இரு தரம் இசக்கி நன்றாக வெட்டுகிறாரா என்று பார்பபதற்காக 'இசக்கி...' என்று குரல் கொடுப்பார்.இசக்கி உடனே கத்தரி கோலை தட்டையாக வைத்துக் கொண்டு உச்சந் தலையில் தட்டி காண்பிப்பார். முடி கத்தரி கோலுக்கு மேலே வரக்கூடாது. அது தான் அளவு. பின் தலையில் நனறாக மெஷின் கட்டிங் செய்து நல்ல புல் தரை போல் இருக்க வேண்டும். முடி வெட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்தால் எனக்கே அடையாளம் தெரியாது. எனக்கு அப்புறம் மாமாவுக்கு இல்லாத முடியை தேடி தேடி இசக்கி பொறுமையாக வெட்டுவார்.

முடி வெட்டிக் கொண்டு ஆத்தங்கரைக்கு போகும் வழியில் வெட்கம் பிடுங்கி தின்னும். பெண்கள் எல்லாம் சிரிக்கிறர்களா என்று ஒரு முறை நிமிர்ந்து பார்பேன். அன்றைக்கு தெரிந்தவர்கள் எல்லாரும் ."என்ன அறுவடை ஆயாச்சு போல.." என்று பின்ன்ந் தலையில் தடவிப் பார்பார்கள். குறுக வெட்டியிருந்தால் அப்படி செய்யும் போது கையில் கிச்சு கிச்சு மூட்டுவட்து போல இருக்கும். ஸ்கூலில் அன்று முழுவதும் பின்னால் உட்கார்ந்து இருக்கும் பையன் தொல்லை தாங்க முடியாது..தலையை அடிக்கடி தடவிக் கொண்டே இருப்பான். சில வம்பு பிடிதவர்களும் அவ்வப்போது வந்து தடவி வம்பு செய்வார்கள். அப்போதெல்லாம் மனதில் இசக்கியை திட்டுவேன். ஸ்டெப் கட்டிங் வெட்டிக் கொண்டு வரும் நண்பர்களை ஆதங்கத்துடன் பார்த்த நாட்கள் அவை. இசக்கியை பொறுத்த வரை ஸ்டெப் கட்டிங்கெல்லாம் காலி பசங்கள் தான் வைத்துக் கொள்வார்கள். மாமாவிடம் இதை பற்றி கேட்டது கூட கிடையாது.

நான் காலேஜ் வந்த போது இசக்கிக்கு வயதாகி கடையை மூடி விட்டார். கொஞ்சம் தைரியம் வந்த காலம் அது. ஸ்டெப் கட்டிங் நண்பன் தான் புது கடையை அறிமுகம் செய்தான். தனியாக சென்று முடி வெட்டிக் கொள்வேன். மாமா ஆத்தங்கரைக்கு போன பின் தெரியாமல் மாமியிடம் சொல்லி விட்டு கடைக்கு செல்வேன். வெட்டிக் கொண்டு திரும்ப வந்ததும் மாமா கேட்பார் ...'காடா முடி வளர்திருக்கே ..வெட்டிக்க வேண்டாமா...?' மாமி மாமாக்கு தெரியாமல் என்னை பார்த்து சிரிப்பாள். நான் பதிலே சொல்ல மாட்டேன்.மாமி தான் எதாவது சொல்லி சமாளிப்பாள். பிறகு கொஞ்ச நாளில் மாமாவுக்கும் தெரிய ஆரம்பித்த போது தண்ணி தெளித்து விட்டு விட்டார்.

முடி வெட்டிக்கொள்ள இங்கிலாந்தில் குறைந்தது 7 பவுண்டுகள் ஆகும் என கிள்ம்பும் முன் அங்கிருந்த உயிர் நண்பன் சொன்னான். கணக்கு போட்டு பார்த்தேன் கிட்டத்தட்ட 520 ரூபாய் !!!.
'இன்னும் கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் தான் இருக்கு இப்போ எங்க போற??' அண்ணன் தடுத்த போதும் கடைக்கு சென்று முடி வெட்டிக் கொண்டேன். 'நல்லா close ஆ வெட்டுப்பா..' - மூணு தரமாவது சொல்லியிருப்பேன் கடைக்காரரிடம். ஏர்போட்டிற்கு வழி அனுப்ப வந்தவர்கள் அனைவரும் மனதிற்குள் சிரித்தார்கள்.

இங்கிலாந்து வந்து 2 மாதம் கழித்து மீண்டும் இந்த படலம் ஆரம்பித்தது.இருப்பதிலேயே குறைச்சலாக எங்கே முடி வெட்டிக் கொள்ளலாம் என்று நண்பர் பட்டாளம் ஆராய்ச்சி செய்து வைதிருந்தது. எல்லாத்துக்கும் மெஷின் வைத்திருந்தார்கள்.இசக்கியின் கத்தரி கோல் அளவு மாதிரி இங்கே 1,2,3,4 என்று அளவு வைத்திருந்தார்கள். கம்பளி ஆட்டிலிருந்து கம்பளி எப்படி எடுக்கிறார்கள் என்று discovery channel லில் பார்திருக்கிறேன். அதே தான் நடந்தது இங்கே. இசக்கி மாதிரி இவனும் அடையாளம் தெரியாமல் ஆக்கி இருந்தான். இந்த முறை என் 2 வயது குழந்தைக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை. மனைவி மற்றும் நண்பர்களின் பரிகாசம் தாங்க முடியவில்லை. இனிமேல் இந்த் ஊர் கடையில் முடி வெட்டிக் கொள்ள கூடாதென்று மங்கம்மாள் போல நானும் சபதம் செய்தேன். கடை தெருவுக்கு சென்று உபகரணங்கள் வாங்கி வந்தேன்.திரும்பவும் பிரச்சனை. எனக்கு நானே எப்படி வெட்டிக் கொள்வது?

மனைவியிடம் கெஞ்சினேன். நீண்ட கோரிக்கை பட்டியல் படித்தாள். கடையில் ஆவதை காட்டிலும் ஜாஸ்தியாக இருந்தது. மங்கம்மாளுக்கு அவலம் வேண்டாமென்று உடன் படிக்கைகு தயாரானேன். முடி வெட்டுவதில் ஆராய்சி செய்த்வன் போல நுணுக்கங்கள் சொன்னேன். செயல் முறை விளக்கத்திற்காக ஒரு நண்பனை ஆசை காட்டி (மோசம் செய்து) என்னிடம் முடி வெட்டிக் கொள்ள சம்மதிக்க வைத்து சிரத்தையாக முடி வெட்டினேன். நனறாக வந்திருக்கிறது என்று பல முறை சொல்லியும் அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. மனைவியை தயார் படுத்தி நானும் ஒரு வழியாக முடி வெட்டிக் கொண்டேன். 'அப்போ நான் கேட்ட லிஸ்ட்? ' மனைவி கேட்ட போது வீரப்பா சிரிப்பு சிரித்தேன். 'இப்பிடி ஏமாத்தறதுக்கு உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்' மனைவி மனதார வாழ்த்தினாள்.

அடுத்த நாளே ஆபீஸில் கிடைத்தது. 'கரிச்சான் குஞ்சு மாதிரி இருக்கடா ' - நண்பன் அன்போடு சொல்ல , மற்றவர்கள் சந்தோஷமாக வ்ழி மொழிந்தார்கள். சொன்ன லிஸ்டை பேசாமல் வாங்கி கொடுத்து விட்டு அடுத்த முறை 'காக்க காக்க சூர்யா' ஸ்டைலில் வெட்டிக் கொள்ளலாம் என்று மனதை தேற்றிக்கொன்டேன். "நான் என்ன மாங்கா மடைச்சியா? கடையிலேயே வெட்டிக்கொள்ளுங்கள்" என்று மனைவி சொல்லி விட்டாள். :(

இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை 'கரிச்சான் குஞ்சு' கூத்து நடந்து கொண்டிருக்கிறது.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?