<$BlogRSDUrl$>

Wednesday, November 02, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...10 

For previous Parts -- > Part 1      Part 2    Part 3    Part 4    Part 5    Part 6    Part 7    Part 8   Part 9

லிஸ்டில் இருந்த இரண்டு பராசக்திகளை ஏற்கனவே தெரியும். தெரியுமென்றால்..எனக்கு அஸினைத் தெரியும்ங்கற மாதிரி. ரெண்டு மூனு யூத் பெஸ்டிவல்களில் பார்த்திருக்கிறேன் பேசிப் பழக்கம் கிடையாது. காலேஜில் எங்க க்ளாசில் விஷயம் பரவியிட்டிருந்தது. விழா இரண்டு நாட்கள் தொடர்ந்து என்பதால் பையன்கள் வருவதாக சொல்லியிருந்தார்கள்.

"டேய் நீபாட்டுக்கு ஒரு ஓரமா உட்கார்ந்து வாசி..வேணாம்ங்கல ஆனா நாங்க வந்திருக்கற ஜிகிடிகள கவனிக்கணும் அதனால நீ வாசிக்கறத உட்கார்ந்து பார்க்கணும்னு எதிர்பார்க்காத எங்கிருந்தாலும் எங்க கைத்தட்டு உனக்குத் தான்" - அவர்களைச் சொல்லி குற்றமில்லை அவர்கள் வயசு அப்பிடி.

விழா ஆரம்பிப்பதற்கு முந்தின நாள் மாலையே வரச் சொல்லியிருந்தார்கள். என்ன சட்டை போட்டுக் கொள்வது, முடியை எப்பிடி சிலுப்பி வாரிக் கொள்வது, விபூதி இட்டுக்கொண்டு போனால் பழம் என்று நினைத்துவிடுவார்களோ, எப்பிடி அறிமுகப் படுத்திக் கொள்ளலாம் என்று எல்லாமே குழப்பமாக இருந்தது. அதுவும் பெண்கள் மெஜாரிட்டி உள்ள டீமில் வேறு இருக்கிறோம்...அதனாலேயே பயங்கர டென்ஷன். சொந்த மிருதங்கம் வார் இழுத்துக் கட்டவேண்டியிருந்ததால் வேறு ஒரு முக்கியமான இடத்தில்(எந்த இடமென்று வரும் பதிவுகளில் தெரியும்) கடன் வாங்கிக் கொண்டு ஒரு மார்க்கமாகப் போய்ச் சேர்ந்தேன். சென்னை தவிர மொத்த தமிழ்நாட்டுப் பல்கலைகழகங்களிலிருந்தும் குழுமியிருந்தார்கள். நான் கடைசி ஆளாகப் போய்சேர்வதற்குள் திருநெல்வேலிப் பசங்கள் பராசக்திகளிடம் அன்யோன்யமாகியிருந்தார்கள்.

வரி வாங்கப் போன ஜாக்ஸன் துரை மாதிரி "எங்கு வந்தாய் எதற்கு வந்தாய்" ரீதியில் தான் பசங்களிடம் வரவேற்பு இருந்தது. நமக்கு இந்தக் கழிசடைகளைப் பற்றி என்ன கவலை. பராசக்தி ஜிகிடிகள கடைக் கண் காட்டினால் போறாதோ? குலுக்கல் முறையில் ஒரு அதிர்ஷ்டசாலி ஜிகிடியைத் தேர்ந்தெடுத்து நைசாக நூல் விட்டேன். ஜொள்ளாண்டவர் கருணையே கருணை அந்த ஜிகிடி எனது அடுத்த வீட்டு நண்பியின் சினேகிதியாம். இது போறாதா...கருணைக் கதாட்சம் அமோகமாய் இருந்தது. லோகச் ஷேமத்தைப் பற்றி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திருநெல்வேலி நண்பர்களுக்கு முதலில் இஞ்சி தின்ற மாதிரி இருந்தது. அப்புறம் போகப் போக எல்லாருமே எல்லோருடன் பேசி பழக்கமாகிவிட்டதால் நல்லதொரு பல்லகலைக்கழகம் குடும்பமானது. என்னென்ன போட்டிகளில் யார் யார் கல்ந்துகொள்வது என்ன பாட்டு பாடுவது டான்ஸ் ஆடுவது என்று அன்றிரவு விடிய விடிய விவாதித்தோம். மொத்தத்தில் ஒரு டீமாக பெரும்பாலான போட்டிகளிலும் கலந்துகொள்ள எங்களைத் தயார் செய்துகொண்டோம். மிருதங்கம், டோலக்கு, டிரம்ஸ் என்று எனக்கு சொத்து பிரித்துக் குடுத்துவிட்டார்கள். இது போல மற்றவர்களுக்கும். டான்ஸ் மட்டும் பராசக்திகள் ஹோல்சேலில் எடுத்துக்கொண்டார்கள்.

பாட்டுக்கும் டான்ஸுக்கும் நான் தான் வாத்தியம் வாசித்தேன். பயிற்சியில் அவர்கள் ஆடும் போது ராஜா பட்ங்களில் வருவது மாதிரி "சபாஷ் சரியான் போட்டி" என்று தனியாளாக தொடையைத் தட்டிக் கொண்டு ரசிப்பதற்க்கு முந்திய ஜென்மத்த்து குடுப்பினை வேண்டும். "இல்லியே இங்க தாளம் தப்பறதே" என்று அங்கங்கே விஷயம் தெரிந்த மாதிரி பந்தா விட்டுக் கொள்வேன். ஜிகிடிகளும் எனக்கென்னவோ எல்லாம் தெரியும்ங்கற மாதிரி "இப்போ சரியா இருக்கா..." என்று திரும்ப பாடியோ ஆடியோ காட்டுவார்கள். கூட இருந்த திருநெல்வேலி பிரகஸ்பதிகளுக்கு வயத்தெரிச்சல் சொல்லி மாளாது. ஆனால் ஒன்று இவ்வளவு அன்யோன்யமாக பழகும் போது மனதில் கல்மிஷம் எல்லாம் ஓடிப் போய்விடும் எனக்கும் அப்பிடி தான் என்று சொன்னால் நீங்களும் நம்பப் போவதில்லை என் மனைவியும் நம்பப் போவதில்லை. எனக்கு இந்தப் பெண்ணை ரொம்ப நல்லாத் தெரியும்ங்கற வெத்து பந்தாக் கேஸ் தான் நான் அப்போதெல்லாம் (இப்போ அதுவும் இல்லாத பரம சாது :) ).

அடுத்த நாள் விழாவிற்கு எங்கள் கல்லூரியிலிருந்து வானரப் படை வந்திறங்கியது. நான் பராசக்தி ஜிகிடிகளோடு அன்யோன்யமாக இருப்பதை அவர்கள் பார்க்க வேண்டுமே என்று எனக்கு கவலை. இந்த மாதிரி விஷயங்களில் தெரியாதவர்களின் வயத்தெரிச்சலை விட தெரிந்தவர்கள் வயத்தெரிச்சலைப் பார்ப்பதே ஒரு தனி ஆனந்தம் பாருங்கள். சங்கராபரணம் மாதிரி ஜிகிடிகள் டான்ஸ் ஆட நான் மட்டும் மிருதங்கம் வாசிக்கும் சுபலக்னத்தில் ஒரு பையனை விட்டு எல்லாரையும் கூட்டி வரச் செய்தேன். கிளம்பிய வயத்தெரிச்சலில் ஒரு ஊரே உலை வைக்கலாம்.

"டேய் எல்லாம் கரெக்டா இருக்கா...எதாவது வேணுமா...ரவையெல்லாம் இருக்கா..நான் வேணா மிருதங்கத்த கொண்டு வரட்டுமா...எதாவது ஹெல்ப் வேணும்னா கூச்சப் படாம கேளு. நம்ம காலேஜ் மானத்த காபாத்திரனும் என்ன" - எங்க டீமில் ஜிகிடிகள் இருந்ததால் காலேஜ் வானரங்கள் கூச்சமே இல்லாமல் பல்டி அடித்ததுகள்.

டீமில் ஜிகிடிகள் இருந்த்தால் மற்ற டீம் ஜிகிடிகளும் சகஜமாக பழகினார்கள். ரவை உப்புமா செய்வதற்கு மட்டுமில்லாமல் மிருதங்கம் வாசிக்கவும் பயன்படும் என்று நிறைய ஜிகிடிகளுக்கு க்ளாஸ் எடுத்தேன். ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் மாதிரி எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் திரும்பிய பக்கமெல்லாம் கடலை சாகுபடி தான்.

போட்டிகளில் பட்டையைக் கிளப்பினோம். பெரும்பாலான போட்டிகளில் வென்று கேடயத்தையும் கைப்பற்றினோம். லோக்கல் யுனிவர்ஸிட்டி, பராசக்தி ஜிகிடிகள் என்பதால் சப்போர்ட்டுக்கு கேட்கவே வேண்டாம். எனக்கு தங்க முலாமில் பூசிய வெள்ளிப் பதக்கம் கிடைத்தது - கடலை போட்டதற்கு அல்ல மிருந்தங்கம் வாசித்தற்கு.

நான் தாளம் வாசிக்க பராசக்தி ஜிகிடிகள் நடனம் ஆடிய விஷயம் போட்டோவுடன் தினமலரில் வந்தது காலேஜில் என்னுடைய பராக்கிரமத்தை பரப்ப உதவியது. அதற்கப்புறம் கடலைப் பருவம் மாறி வாழ்க்கையில் முக்கியத் திருப்பங்கள் நிகழ்ந்தன.


--இன்னும் ஜொள்ளுவேன்


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?